இன்னும் 2 நாட்கள்... ஆப்கானிஸ்தான் தொடர்பில் பிரதமர் ட்ரூடோ முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணி இன்னும் சில தினங்களில் கனடா முடித்துக் கொள்ளும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்னும் 2 நாட்கள் மட்டுமே காபூலில் இருந்து கனடா விமானங்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. கனடா ராணுவம் சார்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே தற்போது காபூலில் இருந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அந்த விமானங்கள் கால நேரமின்றி பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த சில தினங்களில் ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்த நிலை முடிவுக்கு வரும் என்றார்.
இருப்பினும், ஆப்கன் மக்களுக்கு நாம் இன்னும் பல உதவிகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன்,
ஆப்கானிஸ்தான் மீட்பு நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் தொடர்பில் கருத்து கூற மறுத்துள்ளார், மேலும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 24ம் திகதி வரையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 2,700 பேர்களை கனடா மீட்டுள்ளதாக அமைச்சர் மார்கோ மெண்டிசினோ தெரிவித்துள்ளார். இதில் ஆப்கானிஸ்தான் அகதிகள், கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுமார் 1,000 ஆப்கானியர்கள் கனடாவுக்கு வந்துள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் இப்போது தனிமைப்படுத்தலை முடித்துவிட்டதாகவும் அமைச்சர் மென்டிசினோ இன்று கூறியுள்ளார்.