கனேடிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் கைது
தனிநபர்களுக்கு வந்த அஞ்சல்களை திருடியது, கிரெடிட் கார்டு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எட்டு பேரை கனடா காவல்துறை கைது செய்திருக்கிறது.
கிரெடிட் கார்டு, காசோலை மோசடி உள்ளிட்ட 300 குற்றப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் நாடு கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதர்கவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களிடமிருந்து திருடப்பட்ட தனிநபர்களின் 450 அஞ்சல்கள், கிரெடிட் கார்டு, காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஞ்சல் பெட்டிகளில் தொடர்ந்து அஞ்சல்கள் திருடப்படுவதாக பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், வீட்டு வாயில்களில் இருந்து அஞ்சல்களைத் திருடி வந்த ஒரு கும்பலைக் கைது செய்திருக்கிறார்கள்.
ஒட்டாவா பகுதியில், தொடர்ந்து அஞ்சல்கள் திருடப்படுவதாக வந்த புகார்களை, கடந்த ஏப்ரல் மாதம் முதல் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் குழுவினர், காசோலைகள், கிரெடிட் கார்டுகள், அரசு அடையாள அட்டைகள் பரிசுக் கூப்பன்கள் வந்த அஞ்சல்களைத் திருடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறது.
கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சுமன்ப்ரீத் சிங், குர்தீப் சட்டா, ஹர்மன் சிங், ஜட்டானா, ஜஸன்ப்ரீத் சிங், மன்ரூப் சிங், ராஜ்பிர் சிங், உபெந்தர்ஜித் சிங் உள்ளிட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருமே 21 வயது முதல் 29 வயதுக்குள்பட்டவர்கள் என்பதும், இவர்கள் மீது 344 வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது