தடுப்பூசி ஆளைக் கொல்லும்... கலகக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் கனேடிய இராணுவ அதிகாரி
கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்திற்கு கனேடிய இராணுவத்தினர் உதவ வேண்டாம் என கட்டாயப்படுத்திய முக்கிய இராணுவ அதிகாரி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சிக்கிய அந்த அதிகாரி மீது கலகத்திற்கு தூண்டியதாகவும், இராணுவ அதிகாரிக்கான பக்குவத்தை வெளிப்படுத்த தவறியதாகவும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ரொறன்ரோவில் கொரோனா ஊரடங்கு விதிகளுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இராணுவ அதிகாரி Ladislas Kenderesi,
தமது முழு இராணுவ உடையில் நின்று கொண்டு, கொரோனா தடுப்பூசி ஆளைக் கொல்லும் என உரையாற்றியுள்ளார். Kenderesi என தம்மை அறிமுகம் செய்து கொண்டு பேசிய அவர், இராணுவ வீரர்கள் கண்டிப்பாக தடுப்பூசி விநியோகத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம் கனேடிய பாதுகாப்பு துறையின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இளம் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருந்து Kenderesi விடுவிக்கப்பட்டார்.
மட்டுமின்றி மே 12ம் திகதி இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் கனேடிய இராணுவத்தில் கலகம் ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்கு இலக்காகும் முதல் நபர் Kenderesi என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.