தொழில்நுட்ப உதவி கோரி அழைத்த கனேடிய பெண்ணின் கண் கலங்கவைத்த பதிவு
கனடாவில் வாழும் Sarah Bezanson என்ற பெண், தொழில்நுட்ப உதவி கோரி நிறுவனம் ஒன்றின் அலுவலர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
Sarah Bezanson , அந்த புரோகிராம் லோட் ஆவதற்காக காத்திருக்கும் நிலையில், மறுமுனையில் இருந்த அந்த நபர், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்க, Sarah, தான் கனடாவின் ரொரன்றோவில் இருப்பதாகக் கூறிவிட்டு, நாகரீகம் கருதி பதிலுக்கு நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே மறுமுனையில் பேசியவரின் குரல் கம்மியிருக்கிறது.
தான் இந்தியாவில் டில்லியிருப்பதாக அவர் கூற, Sarah, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கேட்க, உடனே உடைந்து அழத்தொடங்கியிருக்கிறார் அந்த நபர். மன்னிக்கவேண்டும், இங்கே கொரோனா நிலைமை மோசமாக இருக்கிறது, தொடர்ந்து கடந்த 10 நாட்களில் தினம் ஒரு உறவினரை சாகக் கொடுத்துவிட்டேன் என்று அவர் கூற, கலங்கிப்போன Sarah, தான் கொடுத்த வேலையைக் குறித்து கவலைப்படவேண்டாம், வருந்தவும் வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் ஆசுவாசப்பட சற்று நேரம் கொடுத்திருக்கிறார்.
அதன் பின்னர் இருவரும் ஒரு மணி நேரம் பேசிய நிலையில், தன் சோகத்தை Sarahவிடம் பகிர்ந்துகொள்ள, அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் Sarah.
இது குறித்து தனது இடுகையில் எழுதியுள்ள Sarah, இதுபோல தொழில்நுட்ப உதவிக்காகவோ, டோல் ஃப்ரீ எண்ணுக்கோ அழைக்கும்போது, மறுமுனையில் இருப்பவர்களிடன் பரிவும் பொறுமையும் காட்டவேண்டும் என கேட்டுக்கொள்கிறார். மறுமுனையில் பேசுபவரும் ஒரு மனிதர், அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது, பயங்கரமான ஒரு சூழலில் வாழும் நிலையிலும், நமக்காக ஒரு வேலையை சிறப்பாக செய்ய தன்னாலானவற்றை அவர் செய்கிறார் என்பதை நினைவில் கொண்டு, தயவு செய்து பரிவாகப் பேசுங்கள் என்கிறார் Sarah. இந்நிலையில் Sarahவின் இடுகை பலரை நெகிழ வைத்துள்ளளது.
அத்துடன் ட்விட்டரில் மறு ட்வீட் செய்யப்பட்ட இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தி தொடர்பாக, தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கருத்துக்கள் தெரிவித்துவருவதுடன், இதேபோன்ற தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துவருகிறார்கள்.