கனடாவிற்கு 90 துப்பாக்கிகள் கடத்தல்: இரு கனடியர்கள் உட்பட மூவர் கைது
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சுமார் 90 துப்பாக்கிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற வழக்கில், இரண்டு கனடியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் 17 துப்பாக்கிகள் திருடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 7-ம் தேதி, நியூயார்க் மாநிலத்தின் Interstate 90 (I-90) நெடுஞ்சாலை அருகே வெள்ளை நிற 'ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர்' வாகனம் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசாரால் நிறுத்தப்பட்டது.
வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், மோப்ப நாய்களின் உதவியுடன் வாகனத்தைச் சோதனை செய்தபோது, ஒரு கனமான சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட மூவரும் ஹாமில்டன் (Hamilton) பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த மாலிக் ப்ரோம்ஃபீல்ட், கனடா, அமெரிக்கா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் குடியுரிமை கொண்ட கமல் சல்மான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசன் அலி ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பைசன் அலி, கடந்த 2021-ம் ஆண்டு ஹாமில்டனில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்து மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது அவரிடமிருந்து மற்றொரு நபரின் பெயரில் இருந்த காலாவதியான பாகிஸ்தான் ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டது.