கனடாவுக்குள் பயண கட்டுப்பாடுகள் தளர்த்த வாய்ப்பு... வெளிவரும் முக்கிய தகவல்
கனடாவில் தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை நாளும் அதிகரித்துவரும் நிலையில், இந்த கோடைக்குள் அனைவரும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து, தடுப்பூசி அனைவரும் எடுத்துக்கொள்ள தவறினால், கண்டிப்பாக நான்காவது அலையை எதிர்கொள்ள நேரிடும் என ஒட்டாவா பல்கலைக்கழக பேராசிரியர் Raywat Deonandan எச்சரித்துள்ளார்.
மாகாணம் விட்டு மாகாணம் பயணப்பட தடுப்பூசி ஒன்றும் பாதுகாப்பு கவசம் அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதுடன், பாதிப்பு விகிதமும் கட்டுக்குள் இருத்தல் வேண்டும் எனவும், அதேவேளை ஆபத்தான மாறுபாடுகள் இனி நாட்டுக்குள் நுழையாமல் இருப்பதும் முக்கியம் என்றார்.
நாட்டிலுள்ள 75 சதவீத மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் மட்டுமே பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தப்படும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய தரவுகள் படி, 53 சதவீத மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது எடுத்துக்கொண்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால் மாகாணங்கள் தோறும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் விகிதம் வேறுபடுகிறது. ஒன்ராறியோவில் 54% மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், ஆல்பர்ட்டா 50 சதவீதமும், மானிடோபா 48 சதவீதமும் பதிவாகியுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கியூபெக், ஆல்பர்ட்டா உள்ளிட்ட குறிப்பிட்ட மாகாணங்களில் எந்த பயண கட்டுப்பாடுகளும் இல்லை.
நாட்டின் பிற பகுதிகளுக்கு தொற்றுநோய் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான திகதியை இளவரசர் எட்வர்ட் தீவு வியாழக்கிழமை நிர்ணயித்தது.
பயணக் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் ஒன்ராறியோ இதுவரை முடிவெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.