சாலையை விட்டு திடீரென்று ஆற்றுக்குள் பாய்ந்த கார்: தாயார் ஒருவருக்கு நேர்ந்த துயரம்
அயர்லாந்தில் சாலையை விட்டு திடீரென்று தடம் மாறிய கார் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததில், இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
அவருடன் அந்த காரில் பயணம் செய்த பிள்ளைகள் இருவரும் காரில் இருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர். பாடசாலை ஆசிரியையான 44 வயது கில்லியன் டேலி என்பவரே ஜூன் 3ம் திகதி, உள்ளூர் நேரப்படி மாலை 8.45 மணிக்கு ஆற்றுக்குள் பாய்ந்த காரில் சடலமாக மீட்கப்பட்டவர்.
இதில், அவரது பிள்ளைகள் 10 மற்றும் 12 வயதுடைய இருவரும் உயிர் தப்பியதுடன், கார்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஆற்றில் இருந்து கார் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், தன்னார்வலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்ததாக கூறும் அதிகாரிகள், பொலிசார், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், கடற்படை மீட்பு குழு மற்றும் படகுகளுடன் மீட்பு நடவடிக்கையில் களமிறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.