நாம் அனைவரும் கனடியர்களாக இருக்கும்போது கனடா வளர்கிறது" - மார்க் கார்னி !
நாட்டின் ஒற்றுமை, இரக்கம் மற்றும் வலிமை குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது வருடாந்த 'கனடா தின' உரையில், உரையாற்றியுள்ளார்.
நாட்டின் இறையாண்மைக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் அவரது இந்த உரை வெளியாகியுள்ளது.
சுமார் இரண்டரை நிமிடங்கள் நீடித்த இந்த உரையில், கனடாவின் நிலப்பரப்பு மற்றும் மக்களின் அழகு மற்றும் பன்முகத்தன்மையை கார்னி பாராட்டியுள்ளார்.

கடந்த 1867 ஆம் ஆண்டில், நான்கு காலனிகள் இணைந்து ஒரே நாடாக மாறியபோது, தனித்தனியாக இருப்பதை விட ஒன்றாக இணைந்து "ஒரு பெரிய மற்றும் சிறந்த நாட்டை உருவாக்க முடியும்" என்று அவர்கள் நம்பியதை அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய இரயில்வே மற்றும் 'டிரான்ஸ் கனடா நெடுஞ்சாலை' போன்ற கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்க உதவிய நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை கார்னி தனது உரையில் எடுத்துரைத்தார்.
"கனடியர்கள் ஒரு வலுவான, மிகவும் ஒன்றுபட்ட நாட்டை வெறும் கற்பனை மட்டும் செய்யவில்லை; நமது கருவிகளைக் கையில் எடுத்து, அப்படிப்பட்ட ஒரு நாட்டை நாமே உருவாக்கியுள்ளோம்" என்று அவர் கூறினார்.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள "தீர்க்கமான தருணம்" மற்றும் "நம்மைப் பிரிக்க நினைக்கும் சக்திகள்" குறித்துப் பேச கார்னி தயங்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்து வரும் நாடு இணைப்புக் கொள்கை அச்சுறுத்தல்கள் மற்றும் இந்த இலையுதிர்காலத்தில் கனடாவிலிருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்பிற்கு ஆல்பெர்ட்டா மக்கள் தயாராகி வரும் நிலையில் நாட்டின் ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் ஆகியவற்றை வைத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், கியூபெக் மாகாணத்திலும் பிரிவினை குறித்த கேள்விகள் இன்னும் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், கனடாவின் விழுமியங்களையும் வலிமையையும் கார்னி வலியுறுத்தினார்.