மகன்களை கொன்றதாக கூறிய ChatGPT ; Open AI மீது வழக்கு
சொந்த மகன்களை கொன்றதாக ChatGPT கூறிய பொய்யான பதிலை கேட்ட தந்தை Open AI மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது போன்ற சேட்பாட்கள், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பதில்களை வழங்குகின்றன.
சில நேரங்களில் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வன்முறையை ஊக்குவிப்பதை போன்றும், தவறான பதில்களையும் வழங்குவதால் அடிக்கடி சர்ச்சை எழும். இதே போல் தற்போது ChatGPT வழங்கிய பதிலால் நார்வே நாட்டை சேர்ந்த நபர் Open AI நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென்(Arve Hjalmar Holmen) என்ற நபர் ChatGPT-யிடம், "அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்?" என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சாட்ஜிபிடி, "நார்வேயை சேர்ந்த ஆர்வ் ஜால்மர் ஹோல்மென், ஒரு சம்பவத்திற்குப் பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அவருக்கு 7 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது வீட்டின் அருகே குளத்தில் இருவரும் சடலமாக கிடந்தார்கள். அவரது தந்தை ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் தனதே இரு மகன்களையும் கொலை செய்து விட்டு மூன்றாவது மகனை கொள்ள முயற்சித்துள்ளார்.
இதன் காரணமாக அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளது.
இந்த பொய்யான தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த ஹோல்மென், Noyb என்ற டிஜிட்டல் உரிமம் குழுமத்தை அணுகி அவர்கள் மூலமாக ChatGPT யின் தயாரிப்பாளரான Open AI மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இது போன்ற பொய்யான தகவல்களை மற்றவர்கள் பார்த்தால், உண்மை என நம்பக்கூடும் என நினைக்கும் போது எனக்கு பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு உள்ள இரு மகன்கள் குறித்தும், அவர்களது வயது குறித்தும் ChatGPT துல்லியமாக கூறியதால், ஐரோப்பிய தரவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நீங்கள் தவறான தகவல்களைப் பரப்பிவிட்டு, இறுதியில் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையாக இருக்காது என்று ஒரு சிறிய மறுப்பைச் சேர்க்க முடியாது" என Noyb வழக்கறிஞர் கூறினார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள Open AI, "எங்கள் மாதிரிகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் மாயத்தோற்றங்களைக் குறைப்பதற்கும் புதிய வழிகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.
இந்தப் புகாரை மதிப்பாய்வு செய்து கொண்டிருக்கும் வேளையில், இது ChatGPT இன் ஒரு பதிப்போடு தொடர்புடையது, இது பின்னர் துல்லியத்தை மேம்படுத்தும் ஆன்லைன் தேடல் திறன்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.