வாகன் பல்பொருள் அங்காடியால் பரவும் தொற்று: எச்சரிக்கும் யோர்க் பிராந்திய அதிகாரிகள்
வாகன் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான பல்பொருள் அங்காடியில் கடந்த சில வாரங்களில் சென்று திரும்பியவர்கள் கட்டாயம் தங்களை கண்காணிக்க வேண்டும் என யோர்க் பிராந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த அங்காடியில் சென்று திரும்பிய 23 பேர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ம் திகதி முதல் மே 21 வரையான நாட்களில் Concord Food Centre-ல் பொருட்கள் வாங்கியவர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், 14 நாட்களுக்கு பிறகு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விரிவான பரிசோதனைக்கு உட்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மே 12ம் திகதி Concord Food Centre ஊழியர்கள் 14 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மே 17ம் திகதி பொது சுகாதார அதிகாரிகள் குறித்த அங்காடியை நேரடியாக சென்று ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் யோர்க் பிராந்தியத்தை சேர்ந்த 18 பேர், ரொறன்ரோ பகுதியை சேர்ந்த இருவர், பீல் பிராந்தியத்தை சேர்ந்த இருவர் மற்றும் Muskoka பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அந்த அங்காடியுடன் தொடர்பில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், குறித்த அங்காடியில் சென்று திரும்பிய மக்கள், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.