நல்லாசிரியை விருது பெற்றவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது
அமெரிக்காவில் நல்லாசிரியை விருது பெற்ற ஆசிரியை பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இம்மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ளது சட்டனூகா. இங்குள்ள மத்திய உயர்நிலை பள்ளியில் 2020 ஆண்டு முதல் கணித ஆசிரியையாக பணிபுரிந்தவர் 28 வயதான கேசி மெக்ராத்.
நல்லாசிரியை விருது
மாதாமாதம் அளிக்கப்படும் நல்லாசிரியர் விருதை சமீபத்தில் இவர் பெற்றிருந்தார். அப்போது "மாணவர்கள் மற்றும் மாணவியர்களுடன் பேசி பழகி நல்லுறவை ஏற்படுத்தி அதனை வளர்ப்பது எனக்கு விருப்பமான ஒன்று" என ஒரு நிருபரிடம் கேசி தெரிவித்தார்.
வாலிபால் விளையாட்டிலும் பயிற்சியாளராக ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். இந்நிலையில் இவர் தனது மாணவர்களில் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டார்.
12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
அவரை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர். இதனையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் மீது ஹாமில்டன் கவுன்டி காவல்துறை வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியது.
அதில் கேசி மீது சாட்டப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 14 அன்று, "18 வயது நிரம்பாத சிறுவன் என தெரிந்திருந்தும் அச்சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட பெருங்குற்றம்" புரிந்ததால் கேசி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் ரூ. 8 லட்சம் பிணையில் வெளியே வந்துள்ள கேசி, மீண்டும் செப்டம்பர் 6 அன்று ஹாமில்டன் கவுன்டி கிரிமினல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் கேசிக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.