போப் பிரான்சிஸ் இன்னும் மன்னிப்பு கேட்காதது வெட்கக்கேடானது: கொந்தளித்த அமைச்சர்
தங்கள் திருச்சபை இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என கத்தோலிக்க மக்கள் கோரிக்கை விடுக்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கனடாவில் சமீபத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய உண்டுறை பள்ளி விவகாரத்தில் கத்தோலிக்க திருச்சபை இன்னும் மெளனம் காக்கும் நிலையில், கத்தோலிக்க மக்கள் தங்கள் திருச்சபையை பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள கோர வேண்டும் என அமைச்சர் Carolyn Bennett கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேப்போன்று பூர்வக்குடி சேவைகள் அமைச்சர் Marc Miller, கத்தோலிக்க திருச்சபை இந்த விவகாரத்தில் இன்னும் மன்னிப்பு கோராதது வெட்கக்கேடானது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேவாலயங்கள் சார்பில் நடத்தப்பட்டுள்ள பள்ளிகளில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் தேவாலயங்கள் இதுவரை மன்னிப்பு கோரவில்லை என்பதே உண்மை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதகுருக்களின் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிய ஐரிஷ் மக்களிடம் 2010ல் போப் பெனடிக்ட் மன்னிப்பு கோரியது போன்று பூர்வக்குடி மக்களிடமும் கத்தோலிக்க திருச்சபை மன்னிப்பு கோர வேண்டும் என 2015ல் TRC ஆணைக்குழு பரிந்துரைத்தது.
மட்டுமின்றி, 2018ல் போப் பிரான்சிஸை நேரில் சந்தித்த பிரதமர் ட்ரூடோவும் பூர்வக்குடி மக்கள் தொடர்பில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு போப் பிரான்சிஸ் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
TRC ஆணைக்குழுவை சேர்ந்த முன்னாள் தலைவர் Murray Sinclair தெரிவிக்கையில், ஒட்டுமொத்தமாக உண்டுறை பள்ளிகளில் 6,000 சிறார்கள் வரை இறந்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.