பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் விசித்திரமான தண்டனை
தாய்லாந்தில் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு விசித்திரமான தண்டனையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பொதுவாக நீதிமன்றங்களினால் சிறைத்தண்டனைகள் விதிக்கப்படுவது வழமையானதாகும்.
தாய்லாந்தில் சிறைத்தண்டனையை குறைத்து வேறும் ஓர் விசித்திரமான தண்டனையை விதிப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரசாயன அடிப்படையில் ஆண்மையை கட்டுப்படுத்துதல் அல்லது பாலியல் நாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான புதிய சட்ட மூலமொன்று தாய்லாந்து நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அடிக்கடி பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதற்கு மாறாக அவர்களின் பாலியல் இச்சையை குறைப்பதற்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
உடலில் டெஸ்டோரான் ஹோர்மோனை கட்டுப்படுத்துவதன் மூலம் பாலியல் ரீதியான குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தாய்லாந்து அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
உள நல மருத்துவர் மற்றும் மருத்துவ நிபுணர் ஒருவரின் ஆய்வுக்கு பின்னர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் ஒப்புதலுடன் இவ்வாறு பாலியல் நாட்டத்தை குறைக்கும் வகையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளன.
இந்த சட்டம் உத்தேச வரைவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சட்டமாக அமுல்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தாய்லாந்தில் கடந்த 2013ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை பாலியல் குற்றச் செயல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.