கனடா நகரங்களில் அதிகரிக்கும் மனிதக் கடத்தல் ஆபத்து ; பெற்றோருக்கு எச்சரிக்கை
ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகெங்கிலும் இருந்து வரும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை வரவேற்பதற்கு கனடாவின் டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரங்கள் தயாராகி வருகின்றன.
இருப்பினும், இந்த சர்வதேச கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
டொராண்டோ சிறுவர் உதவி சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிசா டாம்லின்சன் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், உலகக் கோப்பை போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகள் மனிதக் கடத்தல்காரர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதாகத் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை, போட்டிக்கு முன்னும் பின்னும் நடக்கும் விருந்துபசாரங்கள் ஆகியவை நம் நாட்டு இளைஞர்களை, குறிப்பாகப் பாலியல் தொழிலுக்காகக் கடத்துவதற்குப் பெரிய வாய்ப்பாகக் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது," என அவர் கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகக் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது பெற்றோருக்குக் கடினமாக உள்ளது. இதைச் சாதகமாக்கிக் கொள்ளும் கடத்தல்காரர்கள், மிகவும் புத்திசாலித்தனமாகவும் திட்டமிட்டும் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, உணர்வுரீதியான சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் விளிம்புநிலை இளைஞர்களை அவர்கள் குறிவைக்கின்றனர்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய டொராண்டோ சிறுவர் உதவி சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.