ஒன்லைன் விளையாட்டுக்கு ஆப்படித்த சீன அரசின் அதிரடி உத்தரவு..
இனி 3 மணி நேரம் மட்டுமே அனுமதியளித்து ஒன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து சீன அரசு அதிரடி.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் பல நாடுகளிலும் அமலில் இருக்கும் நிலையில் இணையதள சேவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இணையதளத்தில் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பலவிதமான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் கொரோனா காரணமாக ஒன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதால் அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது.
எனவே செல்போன்களில் பாடம் படிக்காமல் பெரும்பான்மையான மாணவர்கள் விளையாடுவதற்கு பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவர்கள் விளையாட்டுகளில் அதிக நேரங்களை செலவழிப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகமானவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் செலவிடுவதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இது குறித்து அந்நாட்டு அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டதையடத்தை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்துக்கு மூன்று மணி நேரம் மட்டுமே ஒன்லைன் விளையாட்டுகள் விளையாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.