தைவான் மீது சீரும் சீனா!
தைவான் நாட்டிற்கு எதிராக சீனா இராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், சீனா நாட்டின் 5 ஏவுகணைகள் ஜப்பான் நாட்டிற்குள் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தைவான் எல்லையில் இருந்து சீனா வீசிய 5 ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபோ கிஷி தெரிவித்துள்ளார்.
இது ஜப்பான் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் குடிய மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஜப்பான் நாட்டிற்குள் சீனாவின் ஏவுகணைகள் வந்து விழுவது இதுவே முதல்முறை சில நாள்களுக்கு முன்னர் தைவானிற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி வருகை தந்ததே இந்த பதற்றமான சூழலுக்கு காரணமாக உள்ளது.
இந்த பயணம் காரணமாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. நான்சியின் வருகைக்கு பதிலடி தரும் விதமாக தைவானை சுற்றி சீனா ராணுவ படைகள் மாபெரும் போர் ஒத்திகைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
தைவான் தன்னை சுதந்திர தனி நாடாக கூறி வரும் நிலையில், சீனா தைவானை தனது நாட்டின் அங்கம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிடுவது தீயுடன் விளையாடுவதற்கு சமம் என சீனா எச்சரித்துள்ளது.
எப்படியிருப்பினும் சீனாவின் மிரட்டலை கருத்தில் கொள்ளாமல், தைவானுக்கு ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி இரு நாள்களுக்கு முன்னர் தைவானுக்கு பயணம் மேற்கொண்டார்.
தைவான் விவகாரத்தில் சீனாவிற்கு எதிர் நிலைப்பாட்டில் தான் ஜப்பான் அரசாங்கமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.