சீனா - அமெரிக்கா இடையே மோதல் உச்சம் ; ஹொங்கொங் விவகாரத்தில் சீனா காட்டம்
ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட பயண எச்சரிக்கைக்கு (Security Alert) சீனா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
ஹொங்கொங்கிற்கான சீன இராஜதந்திரி குய் ஜியான்சுன் (Cui Jianchun), அமெரிக்க தூதரக அதிகாரி ஜூலி ஈடேவை (Julie Eadeh) கடந்த மார்ச் 27 அன்று நேரில் சந்தித்து, "வலுவான அதிருப்தி மற்றும் உறுதியான எதிர்ப்பை" வெளிப்படுத்தியதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சீனா இதன்போது வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் ஹொங்கொங் அரசு தனது தேசிய பாதுகாப்பு சட்ட விதிகளில் மாற்றங்களைச் செய்தது.
இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளின் போது மின்னணு சாதனங்களின் கடவுச்சொற்களை (Passwords) வழங்க மறுப்பது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்க தூதரகம் மார்ச் 26 அன்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், புதிய விதிகளின் கீழ் அமெரிக்க குடிமக்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாகத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த எச்சரிக்கை சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனச் சீனா சாடியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.