உலகின் கவனத்தை ஈர்த்த சீனத் துறவி! காரணம் என்ன தெரியுமா?
சீனத் துறவி ஒருவர் சுமார் 8,000 தெரு நாய்களைக் காப்பாற்றி வளர்த்து வரும் நிலையில் இவரது சேவை தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜி சியாங் (Zhi Xiang) சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஒரு பௌத்தத் துறவியாவார். 51 வயதான ஜி சியாங் தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாக 1994 முதல் ஷாங்காய் தெருக்களில் கைவிடப்பட்ட விலங்குகளை மீட்டு, தம்முடைய ஆலயத்திலோ விலங்குகள் காப்பகத்திலோ அவற்றுக்குப் புது வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார்.
அவர் சுமார் 8,000 நாய்களைப் பராமரித்து வருகிறார். அதற்காக, ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் டொலர் செலவிடுவதுடன் நாய்களுக்காக மாதந்தோறும் 60 டன் உணவு வாங்குகிறார். மேலும், சில நூறு நாய்களை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு அவற்றை வளர்க்க விரும்பும் மனிதர்களுடன் அனுப்பி வைக்கிறார்.
கிட்டத்தட்ட 3 சதாப்தங்களாக தனது சேவையை செய்துவரும் ஜி சியாங், தாம் காப்பாற்றவில்லை என்றால், அந்த நாய்கள் நிச்சயம் இறந்துவிடும் என்கிறார்.
மேலும் இந்த சேவையை தொடங்கியதிலிருந்து, நாய்களை மட்டுமல்ல, தெருக்களில் உலவித் திரியும் பூனை உள்ளிட்ட விலங்குகளையும் காப்பாற்றிப் பராமரிக்கிறார்.
சீனாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 50 மில்லியன் விலங்குகள் தெருக்களில் சுற்றித் திரிவதாகக் கூறப்படுவதுடன் ஆண்டுதோறும் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது.