வெளிச்சத்திற்கு வந்தது மெகுல் சோக்சியின் கடத்தல் நாடகம்!
பொலிஸாரை கண்டதும் மெகுல் சோக்சி ஆவணங்களை கரீபியன் கடலில் வீசி தப்ப முயன்றதும், கடத்தல் நாடகம் போட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி வரை கடன் பெற்று, தலைமறைவானார்கள்.
இதுபற்றி, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர்.
அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், நிரவ் மோடி லண்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி கடந்த 2018ம் ஆண்டில், ஆன்டிகுவா நாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே தஞ்சம் அடைந்துள்ளார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆன்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை என கடந்த மே 23ந்தேதி தகவல் வெளியானது. இந்த நிலையில், டோமினிகா நாட்டில் சோக்சி இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி சோக்சியின் வழக்கறிஞரான விஜய் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சோக்சியின் உடலில் அவரை கொடுமைப்படுத்தியதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
அவரை ஆன்டிகுவா நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை டோமினிகா நாட்டில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்.
சோக்சியை கட்டாயப்படுத்தி ஆன்டிகுவாவின் ஜாலி துறைமுகத்தில் இருந்து பல்வேறு நபர்கள் அவரை அழைத்து கொண்டு டோமினிகாவுக்கு சென்றுள்ளனர் என்று சோக்சி எங்களிடம் தெரிவித்துள்ளார் என்றும் வழக்கறிஞர் கூறினார்.
மெகுல் சோக்சி, டோமினிகா நாட்டில் பொலிஸ் காவலில் சிறையில் உள்ள புகைப்படங்களும் ஊடகங்களில் வெளிவந்தன. அதில் அவர், ஆள் அடையாளம் தெரியாத வகையில் மெலிந்த தேகத்துடன் காணப்பட்டார்.
மற்றொரு புகைப்படத்தில் அவரது வழக்கறிஞர் கூறியதுபோல் சோக்சியின் வலது மற்றும் இடது கைகளில் காயம் ஏற்பட்டதற்கான தழும்புகளும் இருந்தன. அவரது இடது கண் வீங்கி, ரத்த சிவப்புடன் காணப்பட்டது.
இந்த சூழலில், மெகுல் சோக்சி மிக பெரிய குற்றம் செய்துள்ளார் எனவும் இந்திய குடிமகனான அவரை திரும்ப ஒப்படைக்கும்படியும் டொமினிகா அரசிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது. அவரை நாடு கடத்தி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
நாட்டு மக்களின் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டதில் அவருடைய உண்மையான பங்கு பற்றி இந்திய சட்டத்திற்கு முன் அவர் பதிலளிக்க வேண்டும்.
அவர் இந்திய பிரஜை இல்லை என மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தனது குற்றங்களை மறைப்பதற்காக வேறு நாட்டு குடிமகன் போல் தன்னை முன்னிறுத்துகிறார் என்றும் அரசு தெரிவித்திருந்தது.
சோக்சியை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி டொமினிகா அரசை ஆன்டிகுவா அரசும் வலியுறுத்தியது. எனினும், இதற்கு டொமினிகா அரசு ஒத்துழைப்பு வழங்காத நிலையில், நாடு கடத்துவது பற்றி இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், கிழக்கு கரீபியன் உச்ச நீதிமன்றம் அனுமதியுடன் சோக்சிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் டொமினிகா நாட்டு அரசின் தனிமைப்படுத்தும் மையத்திற்கு சோக்சி கொண்டு செல்லப்பட்டார் என அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இன்டெர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட மெகுல் சோக்சி காணவில்லை என்பது உள்பட அடுத்தடுத்து நடந்த விசயங்கள் கடத்தல் நாடகம் என தற்போது தெரியவந்துள்ளது. அவர் டொமினிகா நாட்டுக்கு தப்பி சென்றதும், பின்னர் அங்கிருந்து கியூபா நாட்டுக்கு தப்ப முயன்றதும் தெரிய வந்துள்ளது.
டொமினிக்கா நாட்டில் சி.ஐ.டி. பொலிஸாரால் மெகுல் சோக்சி எப்படி கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் சாட்சியாக உள்ள அந்நாட்டை சேர்ந்த ஹாரி பேரன் என்பவர் வெளியிட்டுள்ள செய்தியில், ரோசியாவ் பகுதியில் மெகுல் சோக்சியை கண்ட பொலிஸாருக்கு சந்தேகமேற்பட்டுள்ளது.
இதனால் சோக்சியை அவர்கள் அணுகியுள்ளனர். ஆனால், பொலிஸார் வருவது தெரிந்ததும் மெகுல் சோக்சி அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அவரால் நீண்ட தொலைவுக்கு செல்ல முடியவில்லை. செல்லும் வழியில் 2 முறை தவறி விழுந்துமுள்ளார். தன்னிடம் இருந்த ஆவணங்களை அவர் கரீபியன் கடலில் வீசினார்.
அவரை பொலிஸார் பின்னர் துரத்தி பிடித்தனர் என கூறியுள்ளார். பொலிஸார் விரட்டியத்தில் சோக்சிக்கு எப்படி காயம் ஏற்பட்டிருக்க கூடும் என்று அவர் விவரித்து உள்ளார். இதன்பின்னர், பீச்சில் வைத்து பொலிஸாரால் சோக்சி கைது செய்யப்பட்டார். அவரை காவலுக்கு எடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர் என கூறியுள்ளார்.
கைது நடவடிக்கைக்கு பின்பே, இன்டர்போல் அவருக்கு ரெட்-கார்னர் நோட்டீஸ் வழங்கியதும், சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்பதும் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.
இதுபற்றி டொமினிகா நாட்டில் வெளியான பத்திரிகை செய்தியொன்றில், சோக்சியின் வழக்கறிஞர்கள் வழங்கிய அறிவுரையின்படி, சோக்சி கடத்தப்பட்டது போன்று குடும்பத்தினர் கடத்தல் நாடகம் போட்டுள்ளனர். இதனையே ஊடகங்களிடம் தெரிவித்து அதனை உண்மையென நம்ப வைக்க திட்டமிட்டுமுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.