ஹொங்ஹொங் கொண்டுவந்துள்ள புதிய சட்டதிருத்தம்... கனேடியர்களுக்கு கனடா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி
ஹொங்ஹொங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டுள்ள சட்டதிருத்தம் ஒன்றைக் குறித்து, கனேடிய பயண ஆலோசனை அமைப்பு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று ஹொங்ஹொங் அரசு புதிய சட்டதிருத்தம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, வெளிநாட்டவர்கள் உட்பட தற்போது ஹொங்ஹொங்கிலிருப்பவர்கள் யாரும் ஹொங்ஹொங்கை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படலாம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
நீங்கள் ஹொங்ஹொங்கை விட்டு வெளியேற முயற்சிக்கும் அந்த நேரம் வரை உங்களுக்கும் அந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என்பதை நீங்கள் அறியாமலே இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள கனேடிய பயண ஆலோசனை அமைப்பு, இந்த புதிய சட்டம், ஒரு தனிநபர், அவர்களது குடும்பம் அல்லது பணி வழங்குபவர் என யாரை வேண்டுமானாலும் கிரிமினல் மற்றும் சிவில் விடயங்களில் விசாரிக்க அதிகாரம் அளிக்கிறது என்றும் கூறியுள்ளது.
’வெளியேற தடைகள்’ என்னும் சீனாவின் இந்த நடவடிக்கைகள், அதிகாரிகளை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக சீனாவில் அடிக்கடி பயன்படுத்தப்படுவது உண்டு.
இந்த சட்டத்தின் நோக்கம் சட்டவிரோத அகதிகள் நாட்டுக்குள் நுழையாமல் தடுப்பது மட்டுமே, அது நாட்டிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பொருந்தாது என ஹொங்ஹொங் அரசு கூறுகிறது.
ஆனால், அப்படி அல்ல, ஹொங்ஹொங்கிலிருந்து வெளியேறுபவர்களை தடுக்கவும் இந்த சட்டத்தை அந்நாடு பயன்படுத்தக்கூடும் என்கிறார்கள் சட்டவியல் நிபுணர்கள்.
அமெரிக்கா, பிரித்தானியா உட்பட சில மேற்கத்திய நாடுகள் ஹொங்ஹொங் கொண்டுவந்துள்ள இந்த இந்த புதிய சட்டதிருத்தத்தை விமர்சித்ததுடன் நிறுத்திக்கொண்டுள்ள நிலையில், கனடா முதல் நாடாக தன் மக்களுக்கு அதை பயண ஆலோசனையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.