அழிவின் விளிம்பில் உக்ரைனின் மரியுபோல் நகரம்!
ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளது.
உக்ரைன் மீதான போரின் முதற்கட்ட இலக்கை எட்டிவிட்டதாகவும், இனி உக்ரைனின் கிழக்கு பகுதிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தபோவதாகவும் ரஷ்யா அறிவித்தது.
மாறாக உக்ரைன் நகரங்களை சுடுகாடுகளாக மாற்றும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக துறைமுக நகரமான மரியுபோல் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன.
ரஷிய படைகளின் தொடர் குண்டு வீச்சால் மரியுபோல் நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் எலும்புகூடுகளாக காட்சி அளிக்கின்றன.
இந்த நிலையில் மரியுபோல் நகரம் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், எனவே அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி மரியுபோல் நகரில் சுமார் 1,60,000 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பரிதவித்து வருவதாக வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரில் உள்ள மக்களை வெளியேற்ற 26 பஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ரஷ்ய படைகள் சம்மதிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை மரியுபோல் நகரத்துக்கு இன்னும் எந்த உதவிகளும் செய்ய முடியவில்லை என மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.