காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க் காசாவுக்கு பயணம்
இஸ்ரேலின் முற்றுகையை உடைப்பதற்காக சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ள கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார்.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளதாக சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.
இது ஆபத்தானது இல்லை
இந்த அமைப்பு முன்னர் இதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டபோதும் அது மத்தியதரை கடலில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
அதேசமயம் இக் கப்பலில் கிரெட்டாவுடன் பிரான்ஸின் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அரசியல்வாதி ரிமா ஹசனும் பயணம் செய்கின்றார்.
கட்டானியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ள இக்கப்பலில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு நிவாரணங்களையே கொண்டு செல்கின்றோம் ஆனால் இது குறியீட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரீடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாங்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்பதால் இதனை செய்கின்றோம்,ஏனென்றால் நாம் முயற்சிப்பதை இழக்கும் தருணம் நம் மனித நேயத்தை இழக்கும் தருணம் என புறப்படுவதற்கு முன்னர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.
இந்த பணி எவ்வளவு ஆபத்தானதாகயிருந்தாலும் இனப்படுகொலை செய்யப்படும் மக்கள் குறித்து முழு உலகமும் மௌனமாகயிருப்பது போல இது ஆபத்தானது இல்லை என்றும் கிரெட்டா தன்பேர்க் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தமது கப்பல் இடைநடுவில் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் ஏழு நாட்களிற்குள் நாங்கள் காசாவை சென்றடைவோம் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.