கனடாவில் கொல்லப்பட்ட இஸ்லாமிய குடும்பம்... அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் ட்ரூடோ, ஃபோர்டு
லண்டனில் 20 வயது சாரதியால் வாகனத்தை மோதவிட்டு கொல்லப்பட்ட இஸ்லாமிய குடும்பம் தொடர்பில் கூட்டப்படும் அஞ்சலி கூட்டத்தில் பிரதமர் ட்ரூடோ கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிறன்று லண்டனில் 20 வயது சாரதியால் வாகனத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், இஸ்லாமிய குடும்பம் ஒன்று நால்வரை இழந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கீழவையில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது ஒரு பயங்கரவாத செயல் என குறிப்பிட்டார். மட்டுமின்றி, மிருகத்தனமான, கோழைத்தனமான, வெட்கக்கேடான வன்முறை செயல் இது என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதே கருத்தையே முதல்வர் டக் ஃபோர்டும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மத நம்பிக்கைக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு ஒன்ராறியோவில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, நாம் ஒன்றிணைந்த ஒரு சமூகம் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த இக்கட்டான சூழலில் நாம் முஸ்லிம் சமூகத்தின் பின்னால் ஒன்றுபடுவோம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே, இறந்தவர்களுக்கான அஞ்சலி கூட்டம் ஒன்று லண்டன் மசூதியில் இன்றிரவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை முதல்வர் ஃபோர்டு அறிவித்துள்ளார்.
இதனால், இறந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அஞ்சலி கூட்டத்தில் முதல்வர் டக் ஃபோர்டுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.