இங்கிலாந்தில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு 10,000 பவுண்டுகள் அபராதம்!
இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் பிறநாட்டு பயணிகளுக்கு கொரோனா குறித்த பரிசோதனையை செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தொடர்பான விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 10,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படும் என இங்கிலாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அரசாங்கமே ஒரு நிர்ணய கட்டணத்தையும் விதித்துள்ளது.
எனினும் பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்குள் நுழையும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனையை செய்யும் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை செய்யும் நிறுவனங்கள் அவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்க கூடாது என்றும், இதனை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 10,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.