நடுவானில் திடீரென ஏற்பட்ட கோளாறு; 229 பயணிகளுடன் சென்ற விமானத்தில் பரபரப்பு
பாரிஸிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து சிங்கப்பூரிற்கு செல்லாமல் விமானம் அஜர்பைஜா நாட்டிற்கு திருப்பிடவிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
போயிங் 777-300ER ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானச் சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படாத வகையில் விமானம் திசை திருப்பப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த விமானம் பாகு ஹெய்டர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை தரையிறங்கியுள்ளதென விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானிகளுக்கு பாராட்டு
அதேசமயம் இந்த விமானத்தில் பிரான்ஸ் நாட்டவர்கள் உட்பட 229 பயணிகளும் 18 விமான ஊழியர்களும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் விமானத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகள் பயணிகளால் பாராட்டப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் பயணம் பாதிக்கப்பட்ட பயணிகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல மற்றுமொரு விமானத்தை ஏற்பாடு செய்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்த பயணிகளுக்கு உணவும் தங்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், பயணிகள், விமான ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது