காங்கோவில் வெடித்து சிதறிய எரிமலை..பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்த மக்கள்
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் காங்கோ குடியரசும் ஒன்று. காங்கோ நாட்டில் மவுண்ட் நிர்யகோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்நாட்டின் கோமா நகரில் அமைந்துள்ள அந்த எரிமலை கடந்த 2002 ஆம் ஆண்டு வெடித்து சிதறியது. இதனால், எரிமலை லாவா கோமா நகரின் பல பகுதிகளில் பரவியது. இதில் 250 பேர் உயிரிழந்தனர்.
1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். அதன் பின்னர் பல ஆண்டுகளாக மவுண்ட் நிர்யகோங்கோ எரிமலை அமைதியாக இருந்தது. இந்நிலையில், எரிமலை நேற்று மீண்டும் வெடிக்கத்தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து லாவா எரிமலைக்குழம்பு கோமா நகரின் பல்வேறு பகுதிகளில் பரவத்தொடங்கியது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். எரிமலை தொடர்ந்து லாவா தீக்குழம்பை கொட்டி வருவதால் கோமா நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது எரிமலை சீற்றம் சற்று குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும், தொடந்து அச்சம் நிலவி வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயணித்து வருகின்றனர். எரிமலை தொடர்ந்து தீக்குழம்பை கொட்டுவதால் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் உள்ளூர் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
எரிமலை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.