கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால ஷாப்பிங் பருவம் நெருங்கும் நிலையில், நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய மோசடி போக்குகள் உருவாகி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மோசடிகளை கண்டறிவதை இன்னும் கடினமாக்கி வருவதாக பி.எம்.ஓ நிதி நிறுவனத்தின் நிதி குற்றப் பிரிவு தலைவர் லாரி செல்வின் தெரிவித்துள்ளார்.

முழு ஆண்டும் அபாயங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த காலத்தில் விற்பனையாளர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்கும் நேரம் என்பதால், மோசடிக்காரர்களும் அதே அளவில் செயல்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடிக்காரர்கள் ப்ராண்டுகள் அல்லது இன்ஃபுளென்சர்களைப் போல காட்சியளிக்கும் டீப்பேக் deepfake வீடியோக்கள், போலியான வலைத்தளங்கள், போலி மின்னஞ்சல்கள் ஆகியவற்றை உருவாக்க செயற்கை நுண்ணறிவினை பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் QR குறியீடுகளுக்குள் தீங்கிழைக்கும் இணைப்புகளை உள்ளடக்குவது தற்போது “மிகவும் பரவலாக” காணப்படும் மோசடி முறையாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்யும் போது வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.