போலி கொரோனா இல்லாத நபரைக் கண்டறிய நாயைக் களமிறக்கிய பாகிஸ்தான்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு போலி சான்றிதழ் மூலம் கொரோனா பாதிப்பு இல்லை என சுற்றி திரியும் நபர்களைக் கண்டறிய பாகிஸ்தான் அரசு மோப்ப நாய்களைக் களத்தில் இறக்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு செல்லும் வெளிநாட்டு விமான பயணிகளில் பலர், கொரோனா பாதிப்பு இல்லை என்பது போன்ற போலியான சான்றிதழ்களை காண்பித்து விட்டு நாட்டுக்குள் நுழைந்தது விசாரணையில் தெரிய வந்தது. அந்நாட்டுக்கு சென்ற பின்னர் அந்த நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதுபோன்ற போலி நபர்களை தடுக்க புதிய முடிவை அந்நாட்டு அதிகாரிகள் எடுத்தனர். இதன்படி, கொரோனா பாதித்தோரை கண்டறியும் திறன் கொண்ட மோப்ப நாய்களை வரவழைப்பது என முடிவு செய்தனர். இதன்பின், புதுஇஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கொரோனா அறிகுறிகள் தென்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே கொரோனா பாதித்த மனிதர்களை கண்டறியும் திறனை மோப்ப நாய்கள் பெற்றிருக்கின்றன என ஹெல்சின்கி பல்கலை கழகத்தின் ஆய்வு முடிவொன்று தெரிவிக்கின்றது.
இதற்காக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, பயிற்சி பெற்ற மோப்ப நாய்களால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண முடியும் என தெரிய வந்துள்ளது. இதனால் செலவு குறையும். நடைமுறையில் உள்ள பரிசோதனைகளுக்கு மாற்றான மிக எளிய முறையாகவும் இது அமைந்துள்ளது.