கொரோனா அச்சம்; குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் மறைந்திருந்த 7 வயது சிறுவன் உட்பட 15 பேர்!
வியட்நாமில் கொரோனா அச்சத்தில் குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் மறைந்தபடி 7 வயது சிறுவன் உட்பட 15 பேர் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் கொரோனாவின் 4 ஆவது அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான வாகன அனுமதி தவிர உள்நாட்டுப் போக்குவரத்து பெருமளவில் தடை செய்யப்பட்டுள்ளது.
வியட்நாமின் தென் பகுதி கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே லட்சக்கணக்கான மக்கள் முடக்கலில் உள்ளனர். இந்நிலையில் தென் பகுதியில் உள்ள பின் துவான் மாகாணத்தில் பொலிஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது 7 வயது சிறுவன் உட்பட 15 பேர் ஒரு குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்கள் 15 பேருமே கோவிட் நெகடிவ் சான்றிதழை வைத்திருந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாலும், வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் அங்கிருந்து வட பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டு இந்த முயற்சியில் ஈடுபட்டதாகத் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
பொலிஸார் வாகனத்தைத் திறந்தபோது அவர்கள் அனைவரும் மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்ததுடன் , வாகனத்தில் குளிர்சாதன இயந்திரத்தை இயக்கினால் அது உறைநிலையில் குளிரை உண்டாக்குவதால் இயந்திரத்தை இயக்க வேண்டாம் என்று தாங்களே ஓட்டுநரிடம் வேண்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
7 வயது சிறுவனின் தந்தை கூறும்போது, இதுபோன்று குளிரூட்டப்பட்ட டிரக்கில் பயணிப்பது ஆபத்தானது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் தொடர்ந்து தென் பகுதியிலேயே இருந்தால் நிச்சயமாக தொற்றுக்கு ஆளாவோம் என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
15 பேரும் டோங் நை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு இதுவரை 35000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 320 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை வியட்நாம் நாட்டில் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 11,400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.