இந்தியாவில் கொரோனாவின் கோரதாண்டவம் ; அமெரிக்க தொற்றுநோய் தலைமை மருத்துவர் விடுத்த முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் பரவிவரும் கொரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த உடனடியாக சில வாரங்களுக்கு லாக்டவுனை அறிவிக்க வேண்டும் என அமெரிக்காவின் தொற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி (Anthony Fauci) வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இராண்டாவது அலையால் நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரையில்லாத வகையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருந்துகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் தொற்றுநோய்ப் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி (Anthony Fauci) நாளேடு ஒன்றுக்குப் பேட்டி அளித்தபோது,
''இந்தியாவில் மிகக் கொடூரமான வகையில் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், பரவல் சங்கிலியை உடைக்கவும் இந்தியாவில் சில வாரங்களுக்கு லாக்டவுன் அறிவிப்பது அவசியமானது. உடனடியாக ஆக்சிஜன் சப்ளை, மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ பாதுகாப்பு ஆடைகளை அதிகமாக சப்ளை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றிணைத்து இந்தியா இந்த நேரத்தில் கொரோனா சிக்கலைக் கையாள வேண்டும்.
இந்தியா இப்போது செய்ய வேண்டியது, உடனடியாக சில வாரங்களுக்கு லாக்டவுனை அறிவித்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுதான் இப்போது முக்கியமானது. சீனாவில் வைரஸ் பரவிய நேரத்தில் அதாவது கடந்த ஆண்டில், அதைச் சமாளிக்க முழுமையான லாக்டவுனை சீனா அறிவித்தது. அதுபோன்று இந்தியாவும் லாக்டவுனை அறிவிக்க வேண்டும். இந்தியாவில் லாக்டவுன் நீண்ட காலத்துக்கு அதாவது 6 மாதங்கள் வரை அல்ல. தற்காலிகமாக 2-வது அலையின் பரவல் சங்கிலியை உடைக்கவும், பரவலைத் தடுக்கவும் லாக்டவுன் அவசியமானது. லாக்டவுன் அறிவித்து மக்கள் நடமாட்டத்தைக் குறைத்தாலே, தொற்று பரவல் குறைந்துவிடும்.
அத்துடன் இந்திய சாலைகளில் சிலர் தங்கள் சகோதரிகளையும், பெற்றோரையும் படுக்கையில் கிடத்தி ஆக்சிஜனுக்காக அலைமோதுவதைப் பார்த்தேன். மேலும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் லாக்டவுன் நடவடிக்கை எந்த அளவு முக்கியமானதோ அதேபோன்று தடுப்பூசியும் அவசியம். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது.
தற்போதுவரை 140 கோடி மக்களில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முழுமையாகத் தடுப்பூசி செலுத்த நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.