மீண்டும் சீனாவில் தலைதூக்கும் கொரோனா!
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று பாதிப்பால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த சூழலில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. அங்கு நேற்றைய நிலவரப்படி சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று முன்தினம் 33 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தவிர 9 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
புதிய கொரோனா பாதிப்புகள் மூலம், சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,316 ஆக உயர்ந்துள்ளதுடன் அங்கு இதுவரை 4,636 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.