கனடாவின் முக்கிய பிராந்தியத்தில் தீவிரம் காட்டும் கொரோனா
கனடாவில் முக்கியமான பல மாகாணங்களில் கொரோனா நான்காவது அலை தீவிரம் காட்டி வருகிறது. முக்கிய பகுதிகளில் ராணுவம் களமிறக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வாட்டர்லூ பிராந்தியத்தில் ஞாயிறன்று புதிதாக 10 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து வாட்டர்லூ பிராந்தியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எணிணிக்கை 19,711 என தெரிய வந்துள்ளது. இதில் 19,229 பேர்கள் குணமடைந்து குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளனர்.
தற்போதைய தரவுகளின்படி 180 பேர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதில் 9 வயதான குழந்தை ஒன்றும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறது.
இதனிடையே பள்ளி ஒன்றில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதில் நால்வர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் லேசான அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒன்ராறியோவை பொறுத்தமட்டில் ஞாயிறன்று 580 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 300 என அறிவிக்கப்பட்டுள்ளது.