ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 80 வைத்தியர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
தலைநகர் டெல்லியிலுள்ள சரோஜ் மருத்துவமனையில் பணிபுரியும் 80 மருத்துவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் சரோஜ் என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் மொத்தம் 300 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களில் 80 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 12 மருத்துவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே கொரோனாவால் மருத்துவர்கள் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், கிட்டதட்ட மருத்துவமனையில் பணியாற்றும் மூன்றில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் புற நோயாளிகள் பிரிவை மருத்துவமனை நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.
இந்நிலையில் அதே மருத்துவமனையில் 27 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய டாக்டர் ஏ.கே.ராவத் கொரோனாவால் பலியானார். மருத்துவரின் இந்த மரணம் தலைநகர் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.