வணிகக் கட்டடத்தை சட்டவிரோதமாக குடியிருப்பாக மாற்றியவர்களுக்கு அபராதம்!
கனடாவின் வான்கூவர் பகுதியில் உள்ள வணிகக் கட்டடத்தின் ஒரு பகுதியை, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 11 ஒற்றை அறை குடியிருப்புகளாக மாற்றியமைத்ததற்காக இரு நபர்களுக்கும் அவர்களின் நிறுவனத்திற்கும் 57,100 டாலர் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடியிருப்பு வாடகை அமைப்பின் இணக்கம் மற்றும் அமலாக்கப் பிரிவு (CEU), அக்தர் நவாஸ், சர்வர் கான் மற்றும் அவர்களின் '1460317 B.C. Ltd.' என்ற நிறுவனத்திற்கு ஜூலை 10 அன்று இந்த அபராதத்தை விதித்தது.
குறித்த வணிகக் கட்டடத்தின் தரைதளத்தில் கடைகளும் மேல் தளங்களில் அலுவலகங்களும் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 2-வது மற்றும் 3-வது தளங்கள் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாகத் தற்காலிகத் தடுப்புச் சுவர்கள் மூலம் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு ஆட்கள் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
நகர நிர்வாகமும் தீயணைப்புப் படையும் ஆய்வு செய்து, கட்டடத்தில் கடும் தீ பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி "தங்குவதற்கு பாதுகாப்பற்றது" மற்றும் "தங்கத் தடை" உத்தரவுகளை 2025 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் பலமுறை பிறப்பித்தன.
இத்தனை தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், கட்டடத்தில் வாடகைக்கு ஆட்கள் தங்குவது தொடர்ந்தது.
இதன் காரணமாக, நகர நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 2025 நவம்பர் 28 அன்று CEU தனது விசாரணையைத் தொடங்கியது.