கொரோனா வைரஸ் குழந்தை பருவ நோயாக மாறலாம்; ஆய்வில் வெளியான தகவல்!
கொரோனா வைரஸ் குழந்தை பருவ நோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகளிடம் இயல்பாக பரவும் காய்ச்சல் போல வரும் காலங்களில் கொரோனாவும் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் இன்னும் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், இது ஒரு குழந்தை பருவ நோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் நார்வேவின் ஓஸ்லோ பல்கலைக்கழகம் இணைந்து செய்த ஆராய்ச்சியின் முடிவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அந்த ஆராய்ச்சி கட்டுரையின்படி ,
கொரோனா வைரஸ் என்பது குழந்தை பருவத்தில் பரவும் நோய் போல மாறலாம். குழந்தைகளுக்கு பரவும் காய்ச்சல் போல வரும் காலங்களில் கொரோனா வைரஸும் பரவும் வாய்ப்புகள் உள்ளது.
வரும் வருடங்களில் அதிக அளவில் இளம் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவும். உலகம் முழுக்க நீக்கமற இடம்பெறும்.
தற்போது பேண்டமிக் என்ற நிலையில் இருக்கும் வைரஸ் எண்டமிக் என்ற நிலைக்கு செல்லும். ஒரு வைரஸை அழிக்க முடியாமல் போய் அது மனித வாழ்க்கையோடு ஒரு அங்கமானால் அது எண்டமிக் தொற்றாக மாறும்.
அதாவது இந்த எண்டமிக் நோய் அழிக்கப்படாமல் எப்போதும் மக்களோடு இருக்கும். அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் அந்த நோய் மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சில நாடுகளில் தோன்றி மறையும். இதுதான் எண்டமிக் தொற்று.
இதேபோல் கொரோனாவும் மாறும் வாய்ப்பு உள்ளது.அப்போது முதியவர்கள் பாதிப்பதை விட குழந்தைகள் அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக வேக்சின் போடாத குழந்தைகள், புதிதாக பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
இப்போது முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும் எங்களின் ஆய்வுப்படி வரும் காலங்களில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். முதியவர்களுக்கு வேக்சின் மூலமோ அல்லது ஏற்கனவே ஏற்பட்ட கொரோனா மூலமோ எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும். குழந்தைகள் இனி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இதற்கு முன் உலகம் முழுக்க பரவிய சுவாசம் தொடர்பான தொற்று நோய்களும் இப்படித்தான் பரவி இருக்கிறது. 1889-1890 ல் பரவிய ரஷ்யன் ப்ளூ காய்ச்சல் தொடக்கத்தில் முதியோர்களை தாக்கி கொன்றது. தற்போது எண்டமிக் நோயாக மாறிவிட்ட இது குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. இப்போது 7-12 வயது கொண்ட குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அதேபோல் கொரோனாவும் மாறும். அதே சமயம் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த கொரோனா மீண்டும் பரவ தொடங்கினால், வயதானவர்களுக்கும் மீண்டும் இது பரவும் வாய்ப்பு உள்ளது.
அதாவது ஏற்கனவே பாதிக்கப்பட்ட வயதானவர்கள் மீண்டும் பாதிக்கும் வாய்ப்பு உளள்து.
அவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படலாம். என்ன வைரஸின் தாக்கம் கொஞ்சம் குறைவாக இருக்கும், சீசன் நோய் தாக்குதல் போல அடிக்கடி இதன் பாதிப்பு வந்து போகலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.