புதினை விமர்சித்த ரஷ்ய கலைஞர் போலந்தில் சுட்டுக் கொலை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நையாண்டி செய்வதற்காக அறியப்பட்ட ரஷ்யக் கலைஞர் ஒருவர் போலந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் செம்யான் ஸ்க்ரெபெட்ஸ்கி என்ற தனது கலைப் புனைப்பெயராலும் அறியப்படும் ராபர்ட் குசோவ்கோவ் என உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் காட்டியுள்ளன. அவர் மீது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக லூப்ளின் மாவட்ட அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

துப்பாகிச்சூட்டை அடுத்து தரையில் விழுந்தபோது, தாக்குதல் நடத்தியவர் அவரை அணுகி, மிக அருகில் இருந்து மேலும் இரண்டு முறை சுட்டார். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பெலாரஸ் நாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் மீது இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார். அவர் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, செம்யான் ஸ்க்ரெபெட்ஸ்கி பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினார்.
போராட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினையும் சித்தரிக்கும் ஒரு உருவப்படம் போன்ற கேலிச்சித்திரத்தை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.