விரைவில் முடிவுக்கு வரும் கொரோனா பரவல்: அறிவியல் நிபுணர் உறுதி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் டாக்டர் குதுப் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ் அளவு 156 கோடியை தாண்டியுள்ளது.
இது தொடர்பில், வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் டாக்டர் குதுப் மஹ்மூத், ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது,
இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. இந்திய தடுப்பூசிகள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் 60 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்திய சுகாதாரத்துறை மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் இந்த நடவடிக்கை கொண்டாடப்படுவதற்கு உரிய சிறந்த சாதனை. கொரோனா ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸ் ஆகும், ஏனெனில் இது மிக அதிக மாறுதல்களை கொண்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஆண்டில் (2022) தொற்றுநோயிலிருந்து மிக விரைவில் நாம் வெளிவருவோம் என்று நம்புகிறேன்.
அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாம் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் குதுப் மஹ்மூத் தமது பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.