ஒன்ராறியோவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இந்திய மாறுபாடு
ஒன்ராறியோவில் ஒரே வாரத்தில் மட்டும் இந்திய மாறுபாடு கொரோனா பாதிப்பு ஆறு மடங்கு அதிகரித்ததாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மே 12 முதல் 19 வரையான நாட்களில் இந்திய மாறுபாடு கொரோனா பாதிப்பானது ஒன்ராறியோவில் 45ல் இருந்து 260 என அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலதிகமாக, சாலை மார்க எல்லை மற்றும் விமான நிலையங்களில் சுமார் 203 பேர்களில் இந்திய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சிய 57 பேர்கள் கொரோனா பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மே 19ம் திகதிக்கு பின்னரும் 62 பேர்களுக்கு இந்திய மாறுபாடு கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 322 பேர்களுக்கு இந்திய மாறுபாடு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பி.1.617 என்ற இந்த மாறுபாடானது முதலில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது. மட்டுமின்றி மிக விரைவாக இந்த மாறுபாடு பரவியதுடன், பல ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பலனின்றி இறக்க நேரிட்டது.
மட்டுமின்றி இந்தியாவில் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. மே 10ம் திகதி உலக சுகாதார அமைப்பு இதை கவலையுடன் உறுதி செய்ததுடன், பிரித்தானியா மாறுபாடை விட ஆபத்தானது மற்றும் வேகமாக பரவக்கூடியது என தெரிவித்தது.
ஒன்ராறியோவை பொறுத்தமட்டில் பி.சி.ஆர். சோதனை மூலம் இந்திய மாறுபாடை கண்டறிவது கடினம் என நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
மே 12-19 வரையான நாட்களில் இந்திய மாறுபாடானது ஒன்ராறியோவில் சுமார் 570 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை பிரித்தானிய மாறுபாடானது வெறும் 13 சதவீத வளர்ச்சியே பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.