பிட்காயின் பரிமாற்றத்தை அங்கீகரித்த நாடு!
எல் சால்வடோர் பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது. எல் சால்வடோரில் அமெரிக்க டாலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளது .
பிட்காயின் (Bitcoin) (நாணயக் குறியீடு: BTC; ฿) அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது.
இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு என்று அழைக்கப்படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது.பிட்காயினை வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம், பொருள்கள் வாங்கலாம்,மற்றும் சேமித்து வைக்கலாம்.
பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மைய வங்கியால் (Central Bank) கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப்படுவது இல்லை என்பதுடன் ,கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை.
பிட்காயினைக் கண்டு பிடித்தவர் ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) என்று கூறப்படுகிறது. எனினும் கண்டுபிடித்தவர் உண்மையில் யார் என்று தெரியவில்லை.அவரால் பிட்காயின் திறந்த மூல மென்பொருளாக 2009-ல் வெளியிடப்பட்டது.
பிட்காயினின் நிலையற்றத் தன்மையாலும், பாதுகாப்பற்றத் தன்மையாலும் பல நாடுகளும் அதை பரிமாற்ற நாணயமாக அங்கீகரிக்க சுணக்கம் காட்டி வருகின்றன. மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது.
இருப்பினும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் மறுக்கப்படாத உண்மை. இப்படியான சூழலில் தான் எல் சால்வடோர் அரசு, பிட்காயினை அங்கீகரித்துள்ளது.
எல் சால்வடோரிலும் கூட பிட்காயினை அங்கீகரித்து பணப் பரிமாற்றத்துக்கு ஏற்றபடி நடைமுறைக்கு கொண்டு வருவதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் நிலவி வந்தன.
இந்நிலையில் தற்போது அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அதனாலேயே பிட்காயின் பரிமாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.