கனடாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஒரு முக்கிய தகவல்
கனடாவில் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு பயனுள்ள ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பைசர் மற்றும் மொடெர்னா நிறுவன தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடலில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைவிட ஒன்றரை மடங்கு அதிக அளவில் ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
ஆகவே, தங்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், குறிப்பாக, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள உற்சாகப்படுத்துவதாக ஆய்வை நடத்திய அறிவியலாளரான Dr. Philip Awadalla தெரிவித்துள்ளார்.
உண்மையில், ஆஸ்ட்ராசெனகாவானாலும் சரி, மொடெர்னா அல்லது பைசர் நிறுவன தடுப்பூசியானாலும் சரி, தடுப்பூசி போட்ட இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பெரிய அளவில் ஆன்டிபாடிகளை அவை உருவாக்கவில்லை.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மொடெர்னா மற்றும் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடலில் உருவான அளவுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆகவே, இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், முதல் டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கனேடியர்களை, இரண்டாவது டோஸாக பைசர் அல்லது மொடெர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.