தயவு செய்து கனடாவுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தடுத்து நிறுத்துங்கள்... அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கனடா அரசு கட்டாய தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்திய பின்னர் கனடாவுக்கு வந்த 2,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களில் கால்வாசிப்பேர் திடீர்மாற்றம் பெற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கனடா பொது சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 22க்கும் ஏப்ரல் 22க்கும் இடையில் மட்டுமே, கனடா வந்த 557 சர்வதேசப் பயணிகளுக்கு திடீர்மாற்றம் கொண்ட கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர், அதாவது 518 பேர், பிரித்தானிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் தென்னாப்பிரிக்க வகை கொரோனாவாலும், 12 பேர் பிரேசில் வகை கொரோனாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் எளிதில் பரவக்கூடியவையாக உள்ளனவோ, தீவிர நோயை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளனவோ அல்லது சிகிச்சைகளுக்கும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாதவையாக உள்ளனவோ, அவை அதிகம் கவனம் செலுத்தவேண்டியவையாக உள்ளது.
ஆக, அப்படி கவனம் செலுத்தவேண்டிய கொரோனா வைரஸால் 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பயணிகள் கனடாவுக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு கொரோனா தொற்றியதா என்பதைக் காட்டும் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை.
ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலையில், பயணிகள் மூலமாக கனடாவுக்குள் வந்த அந்த வைரஸ்கள் அனைத்துமே அதற்குப் பிறகு மற்றவர்களுக்கு பரவியுள்ளன.
ஆகவே, எதிர்க்கட்சியினரும், மாகாண அரசுகளின் ஆளுநர்களும், கனடாவுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தடுத்து நிறுத்துமாறு அரசை மன்றாடிக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.