உயிரிழந்த உறவினர்களை காண கனடா வந்த ஜேர்மானியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கனடாவில் கிரேன் விபத்து ஒன்றில் தங்கள் உறவினர்கள் இருவரை பறிகொடுத்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜேர்மனியிலிருந்து வந்த ஒரு தாயும் மகனும் எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொண்டார்கள்.
ஜூலை மாதம் 12ஆம் திகதி Kelowna என்ற இடத்தில் கிரேன் ஒன்று நிலைகுலைந்து ஐந்து பேரை பலி கொண்ட சம்பவம் பலருக்கும் நினைவிருக்கலாம். Eric மற்றும் Patrick Stemmer என்னும் இரண்டு சகோதரர்களும் அந்த விபத்தில் பலியானவர்களில் அடக்கம்.
தங்கள் உறவினர்களான அந்த இருவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுவதற்காக ஜேர்மனியிலிருந்து Norbert Stemmerம், 87 வயதான அவரது தாயாரும் கனடாவுக்கு புறப்பட்டுள்ளார்கள்.
வியன்னாவிலுள்ள கனேடிய தூதரகத்திற்குச் சென்று, அங்கிருந்து கருணை அடிப்படையில் கனடா செல்ல அனுமதியும், தனிமைப்படுத்தலுக்கு விதிவிலக்கும் பெற்று ஆவணங்களை தயார் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் ஆகியுள்ளது.
அத்துடன், விமானம் ஏறும் முன் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆவணம், மற்றும் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆவணம் என அனைத்தையும் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள் இருவரும்.
ஆனால், அவர்கள் கனடாவுக்குள் நுழைந்ததும், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, Norbertஇன் மொபைலில் உள்ள ஆப் திறக்காமல் போக, தாங்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட ஆவணத்தை சமர்ப்பிக்க முடியாமல் போயிருக்கிறது.
எனவே, ஆளுக்கு 5,750 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், மூன்று நாட்கள் ஹொட்டல் தனிமைப்படுத்தல், மற்றும் தங்கள் உறவினர் வீட்டில் மீதமுள்ள தனிமைப்படுத்தலை பின்பற்றவேண்டும் என Norbertக்கும் அவரது தாய்க்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைப்படி எல்லாம் செய்தும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் இப்படி மாட்டிக்கொண்டதால் வருத்தமடைந்துள்ளார்கள் Norbertம் அவரது தாயாரும்!