சிட்னி மருத்துவமனைகளில் தொற்றாளர்களால் நெருக்கடி
சிட்னியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கையில்,
'டெல்டா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் இரண்டு மாத ஊரடங்குக்குப் பிறகும் கொரோனா தொற்று குறையவில்லை. ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 900க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆஸ்திரேலிய அரசு மக்களை வலியுறுத்தியுள்ளது. 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதுடன் இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.