பொதுமக்கள் உதவுங்கள்... கண்ணீருடன் கோரிக்கை வைத்த கனேடிய குடும்பம்

Arbin
Report this article
ஒன்ராறியோவில் வீடு புகுந்து பெண் ஒருவரை மர்ம கும்பல் கடத்திச் சென்ற விவகாரத்தில் பொலிசார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் பொதுமக்களிடம் உதவ கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒன்ராறியோவின் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று 37 வயதான Elnaz Hajtamiri என்பவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளது.
சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்தும், இதுவரை இந்த வழக்கில் துப்புத்துலங்காததுடன், கடத்தப்பட்ட பெண்மணிக்கு என்ன ஆனது என்பதும் வெளிச்சத்துக்கு வரவில்லை.
இந்த நிலையில், Elnaz Hajtamiri கடத்தப்பட்ட விவகாரத்தில் உண்மை தெரிந்த ஒருவர் சமூகத்தில் கண்டிப்பாக இருப்பார் எனவும், அவர் கண்டிப்பாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, Elnaz Hajtamiri-ன் தாயார் பேசிய காணொளி ஒன்றையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர். ஈரானில் வசித்துவரும் அவர், அரபு மொழியில் பேசியுள்ளார். மொத்த குடும்பமும் மிகவும் வேதனையில் உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இந்த விவகாரத்தில் தேவை என குறிப்பிட்டுள்ள அவர், ஒரு தாயாக உங்களிடம் கெஞ்சுகிறேன், Elnaz Hajtamiri தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கண்டிப்பாக உதவ முன்வாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 12ம் திகதி பொலிஸ் உடையில் வாசகா கடற்கரை பகுதி குடியிருப்பு ஒன்றில் நுழைந்த கும்பல் ஒன்று, வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் சென்று, வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளது.
கடத்தல் சம்பவத்திற்கும் 2 வாரங்கள் முன்னர் வாகன நிறுத்தம் ஒன்றில் Elnaz Hajtamiri மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயம்பட்ட அவருக்கு 40 தையல்கள் தேவைப்பட்டது.
இரண்டு சம்பவமும் தொடர்புடையது என கூறும் பொலிசார், கடத்தியவர்களும் தாக்கியவர்களும் வேறு வேறு என குறிப்பிட்டுள்ளனர். மேலும், Elnaz Hajtamiri மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 9 நாட்களுக்கு பின்னர் அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு குற்றகரமான துன்புறுத்தல் மேற்கொண்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
Elnaz Hajtamiri மாயமான வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பதற்கு பொலிசார் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தாலும், இருவருக்கும் இருந்த உறவு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.