கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் இறந்துகிடந்த வழக்கு : சட்டவிரோத ஏஜண்டுகள் இருவர் கைது
கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து இறந்துகிடந்த வழக்கு தொடர்பில் சட்டவிரோத புலம்பெயர்தல் ஏஜண்டுகள் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது.
அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக பணம் வாங்கிய சட்டவிரோத ஏஜண்டுகள், பட்டேல் குடும்பத்தினரை மனித்தோபா மாகாணத்திலுள்ள வின்னிபெக்கில் கொண்டு விட்டுவிட்டுச் சென்றுவிட, பட்டேல் குடும்பத்தினர் தாங்களாகவே நடந்தே எல்லையைக் கடக்க முயன்று, குளிரில் உறைந்து பரிதாபமாக பலியானார்கள்.
image - BBC GUJARATI
இந்த வழக்கு கனடா, அமெரிக்கா, இந்தியா, என மூன்று நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தங்களை புலம்பெயர்தல் ஏஜண்டுகள் என கூறிக்கொண்டு பட்டேல் குடும்பத்தினரை அமெரிக்கா அனுப்ப பணம் பெற்றுக்கொண்ட இரண்டுபேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சட்டவிரோத புலம்பெயர்தல் ஏஜண்டுகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், கனடா மற்றும் அமெரிக்காவிலிருக்கும் இரண்டு ஏஜண்டுகளையும் கைது செய்யவும் தாங்கள் முயன்றுவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் மீது, மனிதக்கடத்தல், குற்றம் செய்ய சதி, மரணத்துக்குக் காரணமாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.