கனேடிய நகரம் ஒன்றில் அவசர நிலை பிரகடனம்: இக்கட்டான நிலையில் மக்கள்
கனடாவின் நுணாவுட் பிராந்திய தலைநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் சிக்கலை அடுத்து நிர்வாகத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நுணாவுட் பிராந்தியத்தின் Iqaluit நகரில் தண்ணீர் மாசடைந்துள்ளதாக நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்னொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் பொதுமக்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் எனவும் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.
இங்குள்ள குழாய் நீரில் எரிபொருள் வாசனை இருப்பது தெரிய வந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மேலும், நகரவாசிகளுக்கு ஒரு வீட்டுக்கு அதிகபட்சமாக நான்கு குடங்கள் வழங்கப்படும் என்றும் எதிர்கால பயன்பாட்டிற்காக அவற்றை வைத்திருக்குமாறும் நிர்வாம் மக்களை வலியுறுத்தியது.
மட்டுமின்றி, ஒரு வீட்டுக்கு 16 லிற்றர் நீர் மட்டுமே அனுமதிக்க வாய்ப்புள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தண்ணீர் சிக்கல் காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை 30,000 லிற்றர் போத்தல் தண்ணீர் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஐந்து தவணைகளாக சுத்தமான குடிநீர் வரவழைக்கப்பட இருப்பதாகவும், முதல் தவணையாக 30,000 லிற்றர் குடிநீர் போத்தல்களில் வந்து சேர்ந்துள்ளதாகவும் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை மாலை நேரத்திற்குள் 170,000 லிற்றர் குடிநீர் வரவழைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Iqaluit நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் குழாய் நீரில் எரிபொருள் கலந்திருக்கலாம் என்றே தெரிய வந்துள்ளது. தண்ணீர் பிரச்சனையால் மக்கள் Sylvia Grinnell ஆற்றில் இருந்தும் தண்ணீர் சேகரிக்க துவங்கியுள்ளனர்.
தற்போதைய சூழலில் இந்த சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என உறுதியாக கூற முடியாது என்றே நகர நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.