நீதி வேண்டும் ; இத்தாலியில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்
இத்தாலிக்கு இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இத்தாலிக்கு மேலதிகமாக, பிரான்ஸ், ஜேர்மனி மக்கள் உட்பட அந்த இடத்திற்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் வத்திக்கானுக்கு செல்ல தயாராக இருப்பதாக இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் இன, மத, பேதம் பாராமல் கூடியுள்ளனர். அவர்களுக்கான நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்” என பிரான்ஸில் இருந்து வந்த பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் கோரும் நீதி நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் , சட்டவிரோத செயல்கள் மாத்திரமே இலங்கையில் இடம்பெறுகின்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒரு சம்பவம் மீண்டும் இலங்கையில் இடம்பெற்று விடக்கூடாது. மத ரீதியான எவ்வித எதிர்ப்பும் வெளியிடவில்லை என கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், நாங்கள் அந்த மக்களுக்காக நியாயமான விசாரணை ஒன்றை விரைவாக மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என்றே கோரிக்கை விடுகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கவேண்டும், முன்னாள் சட்டமா அதிபரை கைதுசெய்யவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு நீதிகோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளதுடன் கத்தோலிக்க மதகுருமாரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் திருச்சபை தெரிவித்துள்ளது.


