சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறதா?
கனடிய விஞ்ஞானி மறுப்பு சன்ஸ்கிரீன் திரவம் தோல் புற்றுநோயை உண்டாக்குகின்றது என இணையத்தில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், தனது ஆராய்ச்சி முடிவுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் கனடாவைச் சேர்ந்த பிரபல தோல் நோய் நிபுணரும் விஞ்ஞானியுமான இவான் லிட்வினோவ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இத்தாலிய மருத்துவர் ஒருவர், மெக்கில் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான இவான் லிட்வினோவ் தலைமையிலான ஆய்வை மேற்கோள் காட்டி, சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்ற பிரசாரத்தை முன்னெடுத்திருந்தார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள பேராசிரியர் லிட்வினோவ் சன்ஸ்கிரீன் புற்றுநோயை உருவாக்குகிறது என்ற கூற்று முற்றிலும் உண்மையற்றது.

எனினும், சன்ஸ்கிரீன் பயன்பாடு குறித்த சில தவறான அணுகுமுறைகள் ஆபத்தானவை என்று எச்சரித்துள்ளார். சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வதால் மட்டுமே சூரிய கதிர்வீச்சிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைத்துவிட்டது என மக்கள் தவறாகக் கருதுவதே முதன்மையான சிக்கலாகும்.
இதனை ஆராய்ச்சியாளர்கள் சன்ஸ்கிரீன் முரண்பாடு என்று அழைக்கின்றனர்.
சன்ஸ்கிரீன் பூசிய பிறகு மணி கணக்கில் வெயிலில் தாராளமாக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்.
இதனால் அவர்கள் அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதால் தோல் கருகதல் மற்றும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.
சூரிய ஒளி தோலில்படும் போது உடலுக்குள் மகிழ்ச்சியைத் தரும் என்டோர்பின்கள் வெளியாவதால், மக்கள் வெயிலில் அதிக நேரம் இருக்க விரும்புகின்றனர்.