தூங்க முடியவில்லை... காபூலில் இருந்து மகளையும் மனைவியையும் மீட்க கெஞ்சும் கனேடியர்
அகதியாக கனடாவுக்கு வந்து தற்போது குடியுரிமை பெற்றுள்ள ஆப்கானியர் ஒருவர், தமது மனைவி மற்றும் மகளை மீட்டுவர உதவி கோரியுள்ளார்.
கல்கரியில் குடியிருந்து வரும் Bahray என்பவரே, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தமது மனைவி மகள் தொடர்பில் வேதனை தெரிவித்துள்ளார். 2011ல் அகதியாக கனடாவுக்கு வந்த Bahray பின்னர் குடியுரிமை பெற்றுள்ளார்.
ஆனால் தமது இளம் மனைவி மற்றும் பிஞ்சு மகளை கனடாவுக்கு அழைத்து வர கடந்த பத்தாண்டுகளாக அவர் போராடி வருகிறார். தற்போதைய சூழலில், தாலிபான்களில் கைகளில் தமது குடும்பத்தை விட்டுவிட முடியாது என தெரிவித்துள்ள Bahray,
ஆப்கானிஸ்தானில் சமீப நாட்களில் நடந்தேறும் விவகாரங்களால் தூங்க்க முடியவில்லை என கண் கலங்கியுள்ளார். துப்பாக்கி முனையில் தாலிபான்களால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
தமது குடும்பம் குடியிருக்கும் பகுதிக்கு அருகாமையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதை காணொளியில் பார்த்த பின்னர் தூக்கத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருப்பதால் தமது குழந்தையின் எதிர்காலம் பாழாகிவிடும் எனவும், கல்விக்காக, கல்லூரி படிப்பிற்காக, வாழ்க்கையில் எல்லாம் அவர் அனுபவிக்க வெண்டும் என்பதற்காக தமது மகளை கனடாவுக்கு அழைத்து வர போராடுவதாக Bahray தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 20,000 ஆப்கான் மக்களை அகதிகளாக கனடா நிர்வாகம் ஏற்கும் என அறிவித்துள்ளது தமக்கு நம்பிக்கை அளிப்பதாகவும்,
தமது குடும்பத்தை விரைவில் சந்திக்கும் வாய்ப்பு அமையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.