தேம்ஸ் நதியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கண்டெடுப்பு
இங்கிலாந்து - தேம்ஸ் நதியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பிரிண்ட்ஃப்ர்ட் பகுதியில் தேம்ஸ் நதியில் கடந்த செப்டம்பர் மாதம் கிராபிக் டிசைனரான சைமன் ஹண்ட் தனது படகில் தனியாக பயணித்துக்கொண்டிருதார்.
அப்போது, நதியின் கரையில் ஆழம் குறைந்த, பாறைகள் நிறைந்த பகுதியில் கருப்பு நிறத்தில் வித்தியாசமான கட்டை வடிவிலான பொருள் ஒன்று கிடந்ததை அவர் கண்டார். இதையடுத்து, அந்த பொருளை எடுத்துப்பார்த்த சைமன் அது ஒரு எலும்பு என்பதை கண்டுபிடித்த நிலையில் அது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
சைமனை சந்தித்த போலீசார் அவரிடம் இருந்த அந்த எலும்பை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதேசமயம் , கைப்பற்றப்பட்ட அந்த எலும்பு மிகவும் கடினமாகவும், வித்தியாசமாகவும் இருந்ததால் அதை பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த எலும்பு எந்த காலத்துடையது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கார்பன் பரிசோதனையில் அந்த எலும்பு கற்காலத்தின் இறுதி ஆண்டுகளை சேர்ந்தது என்பது தெரியவந்தது. அதாவது, அந்த எலும்பு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த எலும்பு கிமு 3,516 மற்றும் 3,365 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டு காலத்தை சேர்ந்தது எனவும், இந்த எலும்பை உடையவர் 5 அடி 7 இன்ச் (170செமீ) உயர் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளை அந்த நபர் ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த எலும்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றூ வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.